Thursday, January 29, 2015

உறுப்புகளின் அறிகுறிகள் !

நமக்கு என்னென்ன நோய் என்பதை நம் உறுப்புகளின் அறிகுறிகள் மூலமே தெரிந்து கொள்ளலாம்:-
கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? :

Ø  சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேறமுடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். தீர்வு : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

Ø  கண் இமைகளில் வலி .. என்ன வியாதி?:
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. தீர்வு : போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Ø  கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?:
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த அழுத்தத்தால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்குத் தவறான தகவல்களை அனுப்பி விடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது. தீர்வு : எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

Ø  கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி? :
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. தீர்வு : குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும் கீழும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்ய வேண்டும்.

Ø  தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி? :
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருந்தும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதயக் கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று மருத்துவர்களுக்கே இன்னும் சரிவரப் புரியவில்லை என்று கூறுகிறார்கள். தீர்வு : அதிகப்படியான மன அழுத்தம் ஹார்ட்அட்டாக் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதைப் பாரமில்லாமல் இலேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சனைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

Ø  முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி? :
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், இரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
தீர்வு : ஒரு நாளைக்கு எட்டுக் குவளை தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர்க் குடுவையை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

Ø  தோல் இளம் மஞ்சளாக மாறுதல் :

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. தீர்வு : அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சனை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

என்றும் உங்கள்
ஹமீது சுல்த்தான் 

Tuesday, January 3, 2012

Saturday, December 10, 2011

உபயோகமான இணை தளம்

அஸ்ஸலாமு அலைக்கும் 
அன்பான சகோதரர்களே ....!

தீனியாத் என்னும் நம் குழந்தைகளுக்கு உபயோகமான இணை தளத்தை கீழே 
குறிப்பிட்டுள்ளேன்.

உங்களுடைய கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்லுங்கள்.
HS.

Sunday, November 27, 2011

உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?

உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?

40 முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது.
இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும்.
அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை
ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால்
நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.

என்னென்ன நோய்கள் வரும்?

       உடல் எடை அதிகரித்தல்

       மன அழுத்தம்

       சர்க்கரை நோய்

       அதிக அளவில் கொழுப்பு சேருதல்

       உயர் ரத்த அழுத்தம்

       இதய நோய்

       எலும்பு மூட்டு நோய்கள்

       புற்று நோய்

வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் :

       மெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது
அளவிற்கு அதிகமாக இடுப்பு பெருத்துப் போவதையும், ரத்த அழுத்தம் மற்றும்
சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகிய 4
பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது. இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்களிடம்
மது மற்றும் புகை பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் ஆரோக்கியம் அபாயத்தை
நோக்கிச் செல்லும்.

       தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் உணவுப் பழக்கத்தால் ஆண்களின்
இடுப்பு அளவு 100 செ.மீட்டருக்கு மேலும், பெண்களின் இடுப்பு அளவு 85
செ.மீட்டருக்கு மேலும் பெருத்து காணப்படுகிறது. மனித உடலில் சேரும்
கொழுப்புகளில் இடுப்பில் சேரும் கொழுப்பாலே ஆபத்து அதிகரிக்கிறது.

உடல் எடை அதிகரிப்பது ஏன்?

       நாற்பது வயதுக்கு மேல் இளமை விடைபெற்று விடுவதால், இயல்பாகவே உடல்
உழைப்பு குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பார்க்கும் வேலையில்
பதவி உயர்வு கிடைக்கிறது. சமூக அந்தஸ்து அதிகரிக்கிறது. நண்பர்கள் வட்டம்
விரிவடைகிறது. அதனால் விருந்து, விழா என்று அவர்கள் உட்கொள்ளும் உணவின்
அளவு அதிகரித்து விடுகிறது. மது பழக்கமும் தோன்றுகிறது.

       உடல் உழைப்பு குறையும் அதே நேரத்தில், உடற்பயிற்சி, விளையாட்டு
போன்றவைகளையும் இந்த பருவத்தில் குறைத்து விடுகிறார்கள். பதவி உயர்வால்
அதிகமான நேரம் உட்கார்ந்த நிலையிலே வேலை பார்ப்பார்கள். இதுபோன்ற பல
காரணங்களால் உடல் குண்டாகிறது.

இந்த பருவத்தில் மனஅழுத்தம் அதிகரிப்பது ஏன்?

       ஐம்பது வயதைத் தொடும்போது திருமண மாகி 20 வருடங்கள் கடந்து
போயிருக்கும். திருமண வாழ்க்கை போரடிக்க தொடங்கியிருக் கும். இந்த
காலக்கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து படிப்பில் முக்கிய கட்டத்தை
அடைந்திருப்பார்கள். படிப்பில் அவர்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைய நிறைய
பணம் தேவைப்படும். பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்திருப்பார்கள்.
அதனால் பணத்தின் தேவையும், மாப் பிள்ளை பார்க்கும் அலைச்சலும் தோன்றும்.

       சில வீடுகளில் பிள்ளைகள் திருமணமாகி தனியாக போய்விடுவார்கள்.
இதனால் கணவனும், மனைவியும் தனிமையை அனுபவிக்கும் நிலை தோன்றும். 40-60
வயதில் கழுத்து எலும்பு தேய்மானம், டென்ஷன் தலைவலி, வயிற்று எரிச்சல்,
ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். தூக்கமின்மை
தோன்றும் முடிவு எடுக்கும் திறன் பாதிக்கும்.

சர்க்கரை நோய் தோன்றுவது ஏன்?

       பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் மரபு வழியாக பிள்ளைகளுக்கு
சர்க்கரை நோய் ஏற்படுகிறது. தந்தைக்கு 50 வயதில் இந்த நோய்
வந்திருந்தால், மகனுக்கு 40 வயதிலேயே வந்துவிடுகிறது. அதிக உடல் எடை
இருந்தால் அதுவும் சர்க்கரை நோய் வர காரணமாகிறது. அதிக உடல் எடை
கொண்டவர்களிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தால், சர்க்கரை நோயின்
தாக்கம் அதிகரிக்கும். உடற்பயிற்சியின்மையும் பாதிக்கும்.

       உடலில் வயிற்றுப் பகுதியில் பான்கிரியாஸ் சுரப்பி உள்ளது.
அங்குதான் உடலுக்கு தேவை யான இன்சுலின் சுரக்கிறது. மது அருந்தும்போது
பான்கிரியாஸ் பாதிக்கப்படுகிறது. அதனால் இன்சுலின் உற்பத்தி குறைந்து,
சர்க்கரை நோய் வருவதற்கான பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது. தந்தைக்கு
சர்க்கரை நோய் ஏற்படும்போது அவர், ஜென்மம் ஜென்மமாக தன் வாரிசுகளுக்கு
அந்த நோயை கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

அதிகமான அளவு கொழுப்பு தோன்ற என்ன காரணம்?

       சர்க்கரை நோய் போல் இதுவும் மரபு வழியாகத் தோன்றுகிறது.
உடற்பயிற்சி செய்யா மல் இருப்பது. அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவது. சைவ
உணவுகளில் உடலுக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. அசைவ உணவுகளில்
உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு உள்ளது. இதுபோன்ற பல்வேறு
காரணங்களால் உடலில் கொழுப்பு அதிகம் சேருகிறது.

உயர் ரத்த அழுத்தம் உருவாகும் காரணம்?

       மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை. அதிகரிக்கும் உடல் எடை,
பெரும்பாலான நேரம் ஏசி. அறையிலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது. ஏ.சி.
அறையில் வேலை பார்த்தால் வியர்வை வராது. உடலில் வியர்வை தோன்றினால்தான்
அதன் மூலம் உடலில் இருக்கும் உப்பு வெளி யேறும். வியர்வை தோன்றாமலே
இருந்தால் உப்பு உடலிலே தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

இதய நோய் தோன்றுவதற்கு என்ன காரணம்?

       இந்த வயதில் இதய நோய் உருவாக ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. மரபு
வழியான இதய நோய் உருவாகும் சூழ்நிலை இந்தியர்களுக்கு மிக அதிகமாக
இருக்கிறது. இந்தியர்களின் ரத்தத்தில் இருக்கும் மரபு வழியான குறிப்பிட்ட
குறைபாடு இதய நோய் தாக்குதல் தன்மையை அதிகரிப்பதாக சமீபத்தில் ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.

       பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை
அடைகிறார்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடும். அந்த
காலக்கட்டத்தில் அவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மன
அழுத்தம், உடல் எடை, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் இதயம்
பாதிக்கும். புகையிலை பயன்பாடு, புகைப்பிடித்தல் போன்றவை இருந்தால்
பாதிப்பு மிக அதிகமாகிறது.

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க மூட்டுவலி நோய்களால்
அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 30
வயதுக்குள் அப்பாவாகி விடுகிறவர்கள், 60 வயதுக்குள் தாத்தாவாகி
விடும்போது இயல்பாக அவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் தேய்மான மாகி
மூட்டு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

       வயதாகும்போது உண்பது, உறங்குவது என்று வாழ்க்கையை அமைத்துக்
கொள்கிறார்கள். அதனால் உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல்
போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும் போது மூட்டு சம்பந்தமான
பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன.

       வந்த நோய்களை குணப்படுத்தவும், இனி நோய்களே வராமல் தடுக்கவும்
சக்தி படைத்தது யோகாசன பயிற்சிகளே என்பது உலகம் அறிந்த உண்மை.

Thanks : Dr.A.S.அசோக்குமார்
 HS.

கோபத்திலும் நிதானம் தவறாமை.


ஏகஇறைவனின் திருப்பெரால்...

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لاَنفَضُّواْ مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّهِ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

3:159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

கோபத்திலும் நிதானம் தவறாமை.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்தக் கட்டுரையில் யூனுஸ்(அலை)அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்தின் மூலம் நமக்கும் உண்டானப் படிப்பினைகளைப் பார்த்தோம்.

அருளாலன் அல்லாஹ்வின் அருள் மட்டும் யூனுஸ்(அலை)அவர்களின் மீது அருளப்பட்டிருக்க வில்லை என்றால் அவர்களுடைய நிலை இவ்வுலகிலும் மறுஉலகிலும் படுதோல்வி அடைந்திருக்கும். 

உலக மக்களுக்கு படிப்பினையாக்குவதற்காக கடைசி நேரத்தில் யூனுஸ்(அலை) அவர்களை காப்பாற்றி தவ்பா செய்ய வைத்து அதன் பின்னர் அவர்களுக்கு உதவியும் செய்து அதற்கு முந்தைய நபித்துவப் பொறுப்பையும் வழங்கி கண்ணியப் படுத்தினான்.

ஒரு வருடமோ அல்லது ஆறு மாதமோ விலக்கி வைத்து விட்டு அதன் பிறகு நபித்துவப் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று நினைக்காமல் மன்னிக்கப்பட்ட அடுத்த கனமே முந்தைய நபித்துவப் பொறுப்பை ஒப்படைத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு மீண்டும் தூதராக நியமித்தான் இதனால் தான் அவனை அளவற்ற அருலாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அழைக்கின்றோம் அவனுடைய அன்புக்கும், அருளுக்கும் எல்லை இல்லை.

மேற்காணும் சம்பவத்தைக் கூறி நீங்களும் அவரைப்போன்று ஆகிவிடாதீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்ததுடன்  அவர்கள் மீதும் அல்லாஹ் தன் அருளை இறக்கி தொடர்ந்து பாதுகாத்து வந்தான்.

அல்லாஹ்வின் அருள் அண்ணல் நபி(ஸல்)அவர்களை பேராபத்துகளிலிருந்து மட்டும் பாதுகாத்ததுடன் நில்லாமல் பெரும் கோபங்களிலிருந்தும் தடுத்து வந்தது அதனால் அண்ணல் அவர்கள் மிருதுவானத் தன்மை உடையவர்களாக இருந்தார்கள்.

அவர்களுடன் இணைந்திருந்த மக்களிடம் அன்பு செலுத்தி அரவனைத்துக் கொண்டார்கள், அவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்காக பெரிய அளவில் பிடித்து தண்டனைக் கொடுக்காமல் அவற்றை அலச்சியம் செய்தார்கள், அவர்கள் விளங்கிக் கொள்ளும் விதம் அவர்களுடைய தவறுகளை மிக இலகுவாக எடுத்துக் கூறினார்கள் அந்த விளக்க உரைகள் அவர்களை மீண்டும் அந்த தவறுகளை செய்ய விடாமல் அரணான நின்று கொண்டது.  

யார் மீதும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கோபம் கொண்டது கிடையாது, கடு கடுத்தது கிடையாது, முகத்தைத் திருப்பிக் கொண்டது கிடையாது. உலக ரட்சகன் அல்லாஹ் தன் அருளால்  அவர்களை சூழ்ந்து கொண்டதே இதற்கு காரணமாகும்.

3:159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

இப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பை பார்த்துக்கொண்டு ஷைத்தான் சும்மா இருப்பானா ? அவனால் சும்மா இருக்க முடியுமா ?

இந்த கட்டமைப்பை எப்படி சிதைப்பது ?
இவர்களை எப்படி பாவத்தாளிகளாக ஆக்குவது ?

இவர்கள்

  • இணைவைக்க மாட்டார்கள்,
  • பொய் சொல்ல மாட்டார்கள்,
  • புறம் பேச மாட்டார்கள்,
  • கொலை செய்ய மாட்டார்கள்,
  • கொள்ளை அடிக்க மாட்டார்கள்,
  • விபச்சாரம்  செய்ய மாட்டார்கள்,
  • கொடிய வட்டியில் வீழ மாட்டார்கள்.

அதனால் ஆதம், ஹவ்வா(அலை) அவர்களை மடக்கியதுப் போன்றே இவர்களையும் மடக்குவது என்ற முடிவுக்கு வந்து செல்வந்தர்களும், உயர்ந்த குலத்தவர்களுமாகிய சிலருடைய சிந்தனையில் இஸ்லாம் சரி தான் ஆனால் முஹம்மதுடன் இணைந்திருக்கும் ஆட்கள் நமக்கு நிகரானவர்களாக இல்லை அவர்களுக்கும், நமக்கும் மத்தியில் சிறிது ஏற்றத் தாழ்வை முஹம்மது ஏற்படுத்தினால் இஸ்லாத்தில் இணைவதில் நமக்கு ஆட்சேபனை இருக்காது என்றுத் தூண்டுகிறான்.

முஹம்மது(ஸல்)அவர்கள் அவர்களின் சபைக்கு அழைக்கப்பட்டு பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது அவ்வேளை அண்ணல் அவர்களின் தோழர்களில் ஒருவரான கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி) அவர்கள்  அவ்விடத்தைக் கடக்க நேரிடுகிறது அந்த தோழருடைய கால்கள் அண்ணல் அவர்களின் குரலைக்கேட்டதும் அங்கிருந்து நகர மறுத்து விடுகிறது. 

நெஞ்சில் நிறைந்த நபியின் உருவத்தை கண்களால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்களின் குரலை செவிகளால் கேட்டு குதூகலமடையும் கண் தெரியாத தோழர்கள் பலர் அன்றாடம் அண்ணல் அவர்களை சூழ்ந்து கொள்வது அக்கால வழக்கம். 

அதனால் அல்லாஹ்வின் தூதர் அவர்களே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் என்ற ஸலாமை உரக்கக் கூறுகிறார் அவரை அவ்விடத்தில் கண்டதும் விவகாரமே இது தான் என்பதால் இந்த இடத்தில் இவர் வந்து விட்டாரே என்று அண்ணல் அவர்களுக்கு கோபம் ஏற்படுகிறது முகத்தை சுளிக்கிறார்கள் அவர்கள் மீது கடு கடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த ஆருயிர் தோழர்களை அண்ணல் அவர்கள் காணவில்லை என்றாலும், அன்பே உருவான அண்ணல் அவர்களை அந்த ஆருயிர் தோழர்கள் காணவில்லை என்றாலும் அந்தப் பொழுது அவர்களை விட்டு மறைவது கடினமாக இருக்கும் அப்படிப்பட்டப் பாசம் அது, நட்புக்கு இலக்கனம் வகுத்தளித்த தோழமை அது.

அண்ணல் அவர்களுக்கு முந்தைய தீர்க்கதரிசிகள், மஹான்கள் எல்லாம் தங்களைச் சுற்றி இருந்தவர்களை சீடர்களாக ஆக்கி வைத்திருந்தனர் அண்ணல் அவர்கள் மட்டும் விதி விலக்காக தங்களுடன் இணைந்திருந்தவர்களை தோழர்கள் என்ற அந்தஸ்த்தை வழங்கி சிறிதளவும் இடைவெளி இல்லாத நெருக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

சகோதரத்துவத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் எழுப்பபட்ட இஸ்லாம் எனும் கோட்டையை சரிப்பதற்கான ஷைத்தானின் சூழ்ச்சியை அல்லாஹ் அறிந்துகொண்டு கண் தெரியாத தோழர் மீது அண்ணல் அவர்கள் கோபம் கொண்டதற்காக அவர்களை அல்லாஹ் கண்டிக்கிறான்.  

1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக 168 இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். 26
ஆரம்ப காலத்திலேயே மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களில் அப்துல்லாஹ் இப்னு உம்மு  மக்தூத்(ரலி)அவர்கள் முதன்மையானவர்கள் அத்துடன் அல்லாஹ்வின் புனித சொற்களாகிய திருமறைக்குர்ஆனை உள்ளத்தில் பூட்டி வைக்காமல் அதை பலருக்கும் எத்திவைப்பதில் மதீனாவில் இரவு பகலாக பாடுபட்டவர்.

நபித்தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு 'ஹிஜ்ரத்' செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் 'முஸ்அப் இப்னு உமைர்'(ரலி) அவர்களும், 'இப்னு உம்மி மக்தூம்'(ரலி) அவர்களும் தாம். அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 4941.

இப்படிப்பட்ட அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய ஒருவர் அலச்சியம் செய்யப்ட்டால் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருப்பானா ? உடனே திருவசனத்தை இறக்கி அவர் அலச்சியம் செய்யப்படுவதை கண்டித்து கண்ணியப்படுத்த வைத்தான்.

இது முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் நன்றாகத் தெரியும் ஆனாலும் கோபம் வந்து விட்டதால் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. கோபம் கண்ணை மறைத்து விடும் என்று கூறுவது அனைவருக்குமே பொருந்தி விடுவதற்கு இதுவும் சான்றாகும்.

செல்வந்தர்களின் கோரிக்கையை ஏற்று ஒப்பந்தம் செய்யும் நோக்கில் அண்ணல் அவர்கள் அங்கு சென்றிருக்க மாட்டார்கள் மாறாக விளக்கமளித்து தூய இஸ்லாத்தின் எந்த கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் பேசி தஃவா செய்து இஸ்லாத்திற்குள் எடுப்பதற்கே சென்றிருப்பார்கள்.

ஆனாலும் அவர்களுடனான ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்விடத்தை விட்டு அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்(ரலி) அவர்கள்; நகராத காரணத்தால் அந்த சிறு இடைவெளியில் ஷைத்தான் அண்ணல் அவர்களுக்கு கோபத்தை விதைத்து விட்டான்.

அண்ணல் அவர்களின் கோபம் நீடித்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூத்(ரலி) அவர்கள் அலச்சியம் செய்த நிலையில் இந்த பெருங் கூட்டம் இஸ்லாத்திற்குள் வரவேண்டிய அவசியமில்லை இது ஷைத்தானின் முயற்சியால் சமத்துவத்திற்கு சாவு மணி அடிக்கும் வேலை என்பதை ஷைத்தானின் மறைவான சூழ்ச்சியை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன்  ஷைத்தானின் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து சமத்துவத்தை மேலோங்க செய்து விடுகிறான்.

இவர் அலச்சியம் செய்யப்பட்டுத்தான் அவர்கள் உள்ளே வர வேண்டும் என்றால் அவர்களை விட உள்ளம் இறைநம்பிக்கையால் நிறைந்திருக்கும் பிறரால் இழிவாக கருதப்பட்ட இந்த கண் தெரியாதவர் மேல் என்று நபியிடம் கூறி நீதியை நிலை நாட்டினான் நீதியாளன் அல்லாஹ்.

80: 5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.
80: 7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.
80: 8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.

அதன் பிறகு அண்ணல் அவர்கள் அவர்களுடைய வாழ்நாளிலும் அதுப்போன்று யாரிடமும் கோபம் கொண்டு கடு கடுத்ததேக் கிடையாது.

நிதானம் இழக்க வில்லை
அமைதியே உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு கோபம் வந்தது என்றதும் அது எப்படிப்பட்டக் கோபமாக இருந்திருக்கும் ? அங்கு என்ன நடந்திருக்கும் ? என்ன மாதிரி திட்டி இருப்பார்கள் ? என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படலாம். 

அண்ணல் அவர்களின் முகம் தான் கோபத்தால் சிவந்ததே தவிர வாய் வார்த்தைகளைக் கொட்ட வில்லை. கோபத்திலும் கூட நிதானம் காத்தது அண்ணல் அவர்களைப் போன்று உலகில் எவரையும் அன்றும், இன்றும், என்றும் எவராலும் கோடிட்டுக் காட்டவே முடியாது.

அருள் அகற்றப்ட்டவர்கள்
கோபம் யாரையும் விட்டு வைக்காது அது யாரை ஆக்ரமித்து விட்டதோ விடை பெறும் பொழுது பெரிதாக இல்லை என்றாலும் சிறிய அளவிலேனும் பாதிப்பை ஏற்படுத்தாமல் விலகிச் செல்லாது யார் மீது அல்லாஹ்வின் அருள் உள்ளதோ அவர்களைத் தவிர.

யாருடைய உச்சந் தலையில் கோபம் குடி கொண்டு கடைசிவரை இறங்க வில்லையோ அவருடைய உச்சி முடி ஷைத்தானின் கையில் இருக்கிறது என்பதாக விளங்கிக் கொண்டு துஷ்டனை கண்டால் தூர விலகிக் கொள்வது போல் விலகி கொள்ள வேண்டும்.

அவனருடைய உச்சி முடியை பிடித்துக்கொண்டு ஷைத்தான் அவரை வழி நடத்துவான் அவரிடமிருந்து அல்லாஹ்வின் அருள் அகற்றப்பட்டு விடும் அவன் ஷைத்தானின் அடிமையாகி விடுவான்.

அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நன்மக்களாக நாம் நம்மை ஆக்கிக் கொண்டால் மட்டுமே  கோபம் அதிகம் வராது வந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தாது பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன் அல்லாஹ் நம்மை அதிலிருந்து மீட்டெடுத்து விடுவான்.

அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நன் மக்களாக வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

கோபம் ஷைத்தானின் தூண்டுதல் தான் என்பதை பற்றியும், அதன் கொடிய விளைவுகளைப் பற்றியும் அல்லாஹ் நாடினால் இன்னும் எழுதுவோம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன்  HS  

தூக்கம் ஏன்-எதற்கு-எப்படி?

தூக்கம் ஏன்-எதற்கு-எப்படி?






தூக்கம் மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமே அவனை எப்போதும் விழிப்புடையவனாக இருக்கச் செய்யும்.  குறைந்த நேரம்  தூங்கி அதிகம் உழைப்பவர்கள் பலர் உள்ளனர்.  ஆனால் இவர்கள் குறைந்த நேரத்தில் நல்ல தூக்கம் பெறுவதால் தான் இவர்களால் நன்கு உழைக்க முடிகிறது.
அளவான தூக்கம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.


தூக்கம் எவ்வாறு ஏற்படுகிறது


தூக்கம் என்பது ஒரு இயற்கையான திரும்பத்திரும்ப நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாகும்.    இந்த தூக்கம்தான் உடலில் வளர்சிதை மாற்றம் நன்கு நடைபெற்று உடல் வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகிறது.  அனைத்து உறுப்புகளும் புத்துணர்வும்  பலமும் பெற ஏதுவாகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.  நரம்பு, தசை, எலும்பு சம்பந்தப்பட்ட மண்டலங்களை பலப்படுத்துகிறது. பொதுவாக தூக்கம் என்பது  களைப்புற்ற உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்கு இயற்கை கொடுத்த ஓய்வுதான்.
உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் நன்கு தூங்குவார்கள். ஆனால் உழைப்பின்றி மன உளைச்சல் உள்ளவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.
சிலர் தூக்கம் வருவதில்லை எனக்கூறி இரவு மது, புகை பிடித்தல் போன்ற செயல்களை செய்வார்கள்.  மது ஆரம்பத்தில் மயக்கத்தைத் தருமே ஒழிய நல்ல தூக்கத்தைத் தராது.
மனப்பாதிப்பு, தீராத சிந்தனை, பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, இயலாமை போன்ற குணம் கொண்டவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.



உடல் உழைப்பு


உடலும் மனமும் ஒருங்கே ஓய்வு எடுத்தால் தான் சிறந்த தூக்கம் உண்டாகும்.  உடல் உழைப்பு என்பது தற்போது மறந்தே போய்விட்டது.  இவர்களிடம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் நான் அலுவலகத்திற்கு நடந்தே போகிறேன்.  அதனால் எனக்கு எதற்கு தனியாக உடற்பயிற்சி என்று கேட்பார்கள்.  ஆனால் இவர்கள் தூக்கத்திற்காக மருத்துவரை தேடுவார்கள்.


எவ்வளவு நேரம் தூங்கலாம்


ஒவ்வொரு மனிதனுடைய உடல் மற்றும் வயதைப் பொறுத்து  தூக்கம் வித்தியாசப்படும்.  இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 7-8 மணிநேரம் தூக்கம் தேவை.  ஆனால் பிறந்த குழந்தை 16-18 மணி நேரம் தூங்கவேண்டும்.  பள்ளிக்குச் செல்லாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு  10-12 மணி நேரம் தூக்கம் அவசியம்.  பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் டீன்ஏஜ் பருவத்தில் உள்ளவர்களுக்கும் 9 மணி நேரத் தூக்கம் அவசியம்.  முதியவர்களுக்கு 7-8 மணி நேரம் தூக்கம் தேவை.


உடலில் உள்ள கடிகாரம்


நம் உடலில் நம்மை அறியாமல் ஒரு கடிகாரம் இருக்கிறது.  இதுவே நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.  குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் விழிப்படையவும் செய்கிறது.  இந்த நேரக்காப்பாளர் செயலை உடலில் செய்ய மெலடோனின் (Melatonine) என்ற மூளையில் சுரக்கும் வேதிப் பொருள் உதவுகிறது.  நாள் முழுக்க இதனுடைய அளவு சீராக இருக்கும்.  இரவு ஆனவுடன் இதன் அளவு அதிகரிக்கும்.  பின் இது தூக்கத்தைத் தூண்டும்.  அதனால் சரியான நேரத்தில் தூங்கச் செல்வர்.  இதேபோன்றுதான் விழிப்பு நிலையும்.
இரவுப் பணிக்கு செல்பவர்கள் பகலில் தூங்குவார்கள்.  பகலில் தூங்குவதால் இவர்களின் உடல்நிலை இயற்கைக்கு மாறான நிலையை அடையும்.
பகலில் தூங்கும்போது உடலை இயக்கும் வாத, பித்த, கபத்தில் பித்தமானது அதிகரித்து ரத்தத்தில் கலந்து ரத்தத்தை சீர்கேடடையச் செய்கிறது.  இதனால் உடல் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகிறது.  இயன்றவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.


தூக்கம் கெடுவதால் ஏற்படும் தீமைகள்


தூக்கமின்மையால் மன உளைச்சல், ஞாபக மறதி உண்டாகும். உடல் பலவீனம் அடையும்.


தூக்கத்தின் பயன்கள்


ஆழ்ந்த தூக்கம் மற்றும் விட்டு விட்டு விழிப்பு நிலை இல்லாத தூக்கம் தான் சரியான தூக்கம்.
நல்ல தூக்கம் ஒருவரின் செயல்திறமையை அதிகப்படுத்துகிறது.  ஆராய்சியாளர்களின் கருத்துப்படி மூளையை உபயோகித்து செய்யக் கூடிய கடினமான வேலைகள் அனைத்தும் நல்ல இரவுத் தூக்கத்திற்குப்பின் நன்றாக செய்ய முடிகிறது.  புதியதாக உருவாக்கப்படுகிற எண்ணங்கள் (Creative thinking)  நல்ல தூக்கத்திற்குப் பிறகே உதயமாகின்றன.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம்.  நாள்பட்ட சரியான தூக்கமில்லாதவர் களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.  தூக்கத்தில்தான் நம்முடைய உடல் வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன.  இந்த ஹார்மோன்கள்தான் குழந்தைகளின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டு மல்லாமல் நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகப் படுத்துகிறது. ஆக.. நல்ல ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த அமைதியான தூக்கம் அவசியம். (மருத்துவம்.காம்)

(நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.  (அல்குர்ஆன் 8:11)

அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்;  இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் 25:47)

அப்துல்லாஹ்! எல்லா நாட்களும் நோன்பு வைப்பதாகவும், இரவு முழுவதும் தொழுவதாகவும் உன்னைப் பற்றிச் சொல்லப்படுகிறதே என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். நான் 'ஆம்' (உண்மைதான்) என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அப்படிச் செய்யாதே'' (சில நாட்கள்) நோன்பு வை. (சில நாட்கள்) நோன்பை விட்டு விடு. (கொஞ்ச நேரம்) தொழு (கொஞ்ச நேரம்) தூங்கு. ஏனெனில் உன் உடலுக்கு நீ செய்ய வேண்டிய கடமை உள்ளது. உன் கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமை உண்டு. உன் மனைவிக்கு நீ செய்ய வேண்டிய கடமை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.(நூல்: புகாரி 1153, முஸ்லிம் 2143, திர்மிதி மற்றும் நஸயீ)

'தூக்கத்தை ஒரு மனிதன் தன் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமை' என நபி(ஸல்) அவர்கள் கூறி, தூங்காமல் தொழுது கொண்டே இருப்பதைத் தடுத்துள்ளார்கள். நபி(ஸல்) கூறினார்கள்: உங்களில் எவரேனும் தொழும்போது கண்ணயர்ந்துவிட்டால், அவர் தம்மை விட்டுத் தூக்கம் அகலும் வரைத் தூங்கிவிடட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால் அவர்(உணர்வில்லாமல்) பாவமன்னிப்புக் கோரப் போக, அவர் தம்மைத்தாமே ஏசி (சபித்து) விடக்கூடும். (புகாரி 212-முஸ்லிம் 1440)

Thanks & Regards,
HS.

லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
 
லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
'தான் மட்டுமே என்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைக்காத வரை..!

கதாஃபி...
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாதவரை..!

இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..!அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!
  • 'ஒவ்வொரு லிபியரிடமும் ஒரு வீடு இருந்தாக வேண்டும்' என்று அறைகூவி, அப்படியே அரசின் மூலம் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தும் வந்தார்..! எப்படி..? புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு அரசு மொய் வைக்கும்..! எவ்வளவு தெரியுமா..? 60,000 லிபிய தினார் (50,000 அமெரிக்க டாலர் = அதாகப்பட்டது... சுமார் 24 லட்ச ரூபாய்ங்க சகோ..!) எதுக்காம்..? அவர்களுக்கான ஒரு வீடு வாங்க..!
  • மதுவை தடை செய்த கடாஃபி, லிபியாவில் கல்வி முற்றிலும் இலவசம் என்றார். அவர், 1969-ல் ஆட்சியை கைப்பற்றியபோது 25 % இருந்த லிபிய நாட்டின் கல்வி கற்றோர் எண்ணிக்கை...இப்போது... 83 %..! நாட்டின் மக்கள் தொகையில் 25%லிபியர்கள் பல்கலைக்கழக பட்டம் பயின்றவர்கள்..!
  • லிபியருக்கு தேவைப்படும் கல்வியோ மருத்துவமோ லிபியாவால் தர இயலவில்லை எனில், லிபிய அரசு செலவில் இலவசமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்து அவை தரப்படும்..! அதுமட்டுமா..? அகாலத்தில்... மாசத்துக்கு 2,300 அமெரிக்க டாலர் (சுமார் 1,12,000 ரூபாய்) பயணப்படியாகவும் அவர்களுக்கு அளிக்கப்படும்..!
  • லிபியாவில் படித்து பட்டம் பெற்ற ஒரு லிபிய பட்டதாரிக்கு'வேலை இல்லை' எனில், அந்த பட்டப்படிப்புக்கு தக்க வேலை கிடைத்தால் என்ன சம்பளம் அவருக்கு கிடைக்குமோ, அது அப்படியே அரசின் கஜானாவிலிருந்து அந்த வேலை இல்லா பட்டதாரிக்கு 'படி'-யாக வந்து சேர்ந்துவிடும்..!
  • EB பில் என்றால் என்னவென்றே லிபியர்களுக்கு தெரியாதாம்..! லிபியாவில் தடை இல்லாத மின்சாரம் உண்டு... முற்றிலும் இலவசமாக..!
  • மாதம் தோறும் அரசு ரேஷன் கடையில் பொருட்கள் மிகக்குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த சலுகை குடிமகன்களுக்கு மட்டுமல்ல..! வெளிநாட்டிலிருந்து அங்கே சென்று வேலை பார்ப்பவர்களுக்கும்..! (இத்தகவல்- லிபியாவில் வேலை செய்துவிட்டு பின்னர் என் நிறுவனத்தில் வேலை செய்த பொறியாளர் திரு.D.S.V.பிரசாத் சொன்னது)
  • லிபியாவின் எந்த வங்கியிலும் கடன் பெற்ற லிபியரிடம் அந்தகடனுக்கான வட்டியே வசூலிப்பது கிடையாது..! அசலை மட்டும் அவர் திருப்பித்தந்தால் போதும்..!
  • ஒரு லிபியர் விவசாயம் செய்ய நாடினால்... 'வாங்க வாங்க' என்று அரசே வரவேற்று அவருக்கு தேவையான நிலம் தந்து, பண்ணை வீடு தந்து, விதை தந்து, உரம் தந்து, பாசன வசதி தந்து... ம்ம்ம்... எல்லாமே இலவசம்ங்க சகோ..!
  • ஒரு லிபியர் கார் வாங்க எண்ணினால்... என்ன வகை காராக இருந்தாலும் சரி... உடனே அரசு 50% பில்லை கட்டிவிடும்..!
  • அப்போ...பெட்ரோல் விலை..? ஹி... ஹி... லிட்டர்ஆறேமுக்கால் ரூபாய்ங்க சகோ..! (அட..! சவூதியை விட முப்பது பைசா விலை குறைவா இருக்கே..!)
  • லிபியாவுக்கு பிறநாட்டிலோ... IMF-இலோ எங்குமே கடனே இல்லையாம்..! ஆனால், 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கு லிபியாவுக்கு வரவேண்டிய பணம்தான் வெளியே நிற்கிறதாம்..!
  • ஆட்சியை கைப்பற்றியவுடனேயே, லிபியாவில் இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய விமானதளத்தை மூடச்செய்து, எண்ணெய் கம்பெனிகளை பன்னாட்டு ஏகாதிபத்திய கம்பெனிகளின் கரங்களிலிருந்து பறித்து அரசின் பங்குகளை உயர்த்தி அவற்றை லிபிய அரசு வசமாக்கினார்., கடாஃபி. அதிலிருந்து உலகிற்கு விற்கின்ற எண்ணெயில் ஒவ்வொரு லிபியருக்கும் கூட அவருக்கு உரிய பங்கு உண்டு என்றார். அது மக்களின் தனி வங்கிக்கணக்கில் சேர்ந்து விடும்.
  • ஒரு தாய் ஒரு குழந்தையை ஈன்றேடுத்தால் அவருக்கான லிபிய அரசின் சன்மானம் சுமார் 2.5 லட்சம் ரூபாய்..!
  • 40 ஸ்லைஸ் வெட்டுத்துண்டுகள் போடப்பட்ட ஒரு மிகப்பெரிய பிரட் பாக்கெட் விலை ஏழு ரூபாய் முப்பது காசுதான் லிபியாவில் விற்கிறது..!
  • நீரற்ற வறண்ட நாடான லிபியாவின் முழுப்பாலைவன மக்களும் தண்ணீர் பெற வேண்டி... உலகிலேயே மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம் (Great Man-Made River project)நிறைவேற்றியவர் கடாஃபி மட்டுமே..!
கடாஃபி..! ஒருகாலத்தில் லிபிய மக்களின் புரட்சித்தலைவர்..!
இப்பேர்பட்ட சிறந்த ஆட்சியாளர்தான்... சிறந்த ஆட்சியாளராக இருந்தவர்தான் கடாஃபி..! எகிப்தின் ஹோஸ்னி முபாரக் போலவோ, டுனிசியாவின் பென் அலி போலவோ நிர்வாகத்திறமை அற்றவரோ... ஊழல்வாதியோ அல்லர்..! இவர்களுக்கு இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம்... அமெரிக்க-பிரிட்டிஷ்-ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கு முழுமையாக எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அடிபணியாதது மட்டுமே..!

இவரைப்போயா... இவ்வளவு சிறந்த சர்வாதிகாரியையா(!?) லிபிய மக்கள் எதிர்த்தனர்..? அல்லது எதிர்த்த புரட்சியாளர்களை கொல்லவும் அனுமதித்தனர்..? ஆமாம்..! ஏன்..?

லிபிய புரட்சியாளர்கள்...
அவர்களும் மிகவும் நல்லவர்கள் தான்..!
ஒரு கொலைகார சர்வாதிகாரியை கொல்ல இன்னொரு கொலைபாதக நேட்டோ பயங்கரவாதிகளின் உதவியை ஒப்புக்கொள்ளும் வரை..!

கதாஃபி...
(அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கு)
மோசமான ஆட்சியாளர் ஆனார்..! எப்போது..?

"லிபிய மற்றும் அரபுலக எண்ணெய்க்கான வர்த்தகம் இனி அமெரிக்க டாலரில் அல்ல... தங்கத்தில் தான் இருக்க வேண்டும்"என்று சொல்லும் வரை..!

முன்னர் நடந்த இதையும் கூட... மறந்திருக்க மாட்டீர்கள் சகோ..!

அன்று... அமெரிக்காவின் நண்பனாக இருந்து அவர்களின் ஆயுதங்கள் மூலம் ரஷ்ய ஆயுதங்கள் வைத்திருந்த ஈரானுடன் போர் புரிந்த இராக்கின் அதிபர் சதாம் ஹுசேன், தன் எண்ணெய் வெறியால் பின்னர் குவைத்தை ஆக்கிரமித்ததால் அமெரிக்காவின் எதிரியானார்..!

விளைவு..?

அமெரிக்க "நவீன ஆயுதங்களுக்கும்", அமெரிக்க "அதிநவீன ஆயுதங்களுக்கும்" இடையே வளைகுடா போர் மூண்டது..! அதன் முடிவில், குவைத் விடுதலை அடைந்தவுடன், அந்த ஆத்திரம்..."இனி இராக்கிய எண்ணெய் பரிவர்த்தனை புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் 'ஈரோ' நாணயத்தில்தான் நடைபெறும்" என்று சதாம் ஹுசேன் அறிவித்த பின்னர், "WMD (Weapons of Mass Destruction) வைத்திருக்கிறார் சதாம் ஹுசேன்" என்று பொய்கூறி இராக்கில் நுழைந்ததே அமெரிக்க பிரிட்டிஷ் படைகள்..! (ராஜீவ் சந்திரசேகரனின் Green Zone என்ற ஹாலிவுட் படம் பாருங்கள் சகோ..!)

'ஈரோ'விற்கே அந்த கதி என்றால்... கடாஃபி, தங்கம் கேட்டால்..? இதோ... ஆப்ரிக்காவில் ஒரு இராக்/ஆப்கானிஸ்தான்... உருவாக்கப்படுறது..! முன்னர் தாலிபானிடம் ரஷ்ய ஆதரவு ஆப்கானிய நஜிபுல்லா அரசை எதிர்த்து போரிடச்சொல்லி டன் டன்னாக வெடி பொருட்களையும் நவீன ஆயுதங்களையும் ஒசாமா மூலம் கொண்டு போய் ஆப்கானில் கொட்டி... நடுத்தெருவில் நஜிபுல்லாவை தூக்கில் போடவைத்தது போலவே... இப்போதும் ஆயுதங்களை கொட்டியுள்ளார்கள் லிபியாவில்..! அதேபோல நடுத்தெருவில் அடிபட்டு, உதைபட்டு, இழுபட்டு, சுடப்பட்டு கொல்லப்பட்டார் கடாஃபி..!

ஆட்சியாளர்களுக்கு ஒரு படிப்பினையாக...!
சில மாதங்களுக்கு முன்னர் நிராயுதபாணியாக தெருவில் இறங்கி புரட்சி செய்த குடுகுடு கிழவன் முதல், நடக்கத்தெரிந்த சிறுவன் கைகளில் எல்லாம் இன்று புதுப்புது நவீனரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள் எல்லாம் எப்படி முளைத்தன..? இங்கே photo gallery பாருங்கள்.

மகிழ்ச்சியில் குதித்து குதித்து வானத்தை நோக்கி "டம்... டம்" என்று சுடுகிறார்கள்..! அதில் ஒரு அதிபயங்கர துப்பாக்கி குண்டு வானில் சென்று வெடிக்கிறது..!!! என்னவொரு பயங்கர ஆயுதம்..!!! இந்த குண்டை உடலில் ஒருவன் வாங்கினால் பிழைக்க வழியே இல்லையே சகோ..? யு-ட்யூபில் அணிவகுக்கும் ஆதாரங்கள் இவை..!

Libya Rebels had NATO Weapons from Day 1 - Brand New
இவைகளை எல்லாம் தயாரித்து அன்போடும் பாசத்தோடும் நிராயுதபாணியாக நின்ற லிபியர்கள் கைகளில் அளித்த அந்த அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இப்போது அவற்றை திரும்பியா வாங்கிக் கொள்வார்கள்..? பதிலுக்கு அந்த பயங்கரவாதிகள் இந்த கொலைகார புரட்சியாளர்களிடம் பிரதியுபகாரமாக கச்சா எண்ணெய் அல்லவா கேட்பார்கள்..? இதோ... இப்போதே ஆரம்பித்தும் விட்டார்களே..!

Stolen National Libyan Oil Exported By CIA Run Al-Qaeda Rebel Forces For Illegal Arms

இதனை லிபியர்கள் எதிர்த்தால்..? அப்போது, தங்கள் கைகளில் இருக்கும் அந்த ஆயுதங்களை லிபியர்கள் இனி என்னதான் செய்வார்கள்..? அடப்பாவமே..! இதோ... ஆப்ரிக்காவில் இன்னொரு ஆப்கன்/இராக் உருவாக்கப்பட்டு விட்டதா..!? இனி அமைதி காக்கும் நேட்டோ கூட்டுப்படைகள் லிபியாவில் நிரந்தரமாக தங்கிவிடுமா..?

லிபியர்கள் தங்கள் தலையில் அள்ளிப்போட்டுக்கொண்டது அமெரிக்க மண் அல்ல... அவர்களின் மலம்..! எத்தனை முறை குளித்தாலும் பல வருடங்கள் ஆகுமே... பயங்கரவாதம் எனும் அந்த துர்நாற்றம் நீங்கி... அமைதி எனும் அந்த வாசனை மீண்டும் வீச..!

எகிப்திலும் துனிசியாவிலும் அமெரிக்க நேட்டோ பயங்கவாதிகள் நுழையாததற்கு அங்கே லிபியா மாதிரி எண்ணெய் வளம் இல்லாமை மட்டுமே காரணம் அல்ல சகோ..! அந்தந்த நாட்டு அறிவுடைய ராணுவங்களும் மக்களும்தான் காரணம்..!

அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட பென் அலியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை துனிசியாவின் ராணுவம் ஏற்கவில்லை.

அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை எகிப்தின் ராணுவமும் ஏற்கவில்லை.

அதனால்... அங்கே மக்கள் புரட்சியும் வெற்றிபெற்றது..! சர்வாதிகார ஆட்சியாளர்களும் உயிரோடு நாட்டைவிட்டு தப்பித்தார்கள்..!

ஆனால், லிபியாவின் ராணுவம் கடாஃபியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை ஏற்றது..! நிராயுதபாணியாக நின்ற புரட்சியாளர்களையும் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி அநியாயமாக சுட்டுக்கொன்றது..! இதன் விளைவுதான் பழிதீர்க்க பொதுமக்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் ஆயுதங்கள் தேவைப்பட்டது.

திடுமென அவை அவர்களின் கைகளில் விதம் விதமாக தரப்பட்டன..! வெடித்தன..! பழிவாங்கும் உணர்ச்சிக்கு முன்னால்... கற்ற கல்வியோ... அனுபவித்த வாழ்க்கையோ... எதுவுமே அவர்களை சிந்திக்க வைக்கவில்லை..! லிபியர்களின் அறிவு அப்போது ஏனோ வேலை செய்யவில்லை..!

அதனால்... கடாஃபி,
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் 'கொல்லவைக்கப்பட்டார்'...!
அல்லது...
புரட்சியாளர்களால் நேரடியாக கொல்லப்பட்டார்..!
அல்லது...
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் மறைமுகமாக கொல்லப்பட்டார்..!

பின்வருவன எல்லாமே இனி... மற்ற சர்வாதிகாரிகளுக்கு சிறந்த படிப்பினைகள்..!
  • தான்மட்டுமே நாட்டை ஆளவேண்டும் என்று எண்ணாதீர்கள்..!
  • என்னதான் சிறப்பாக ஆட்சி செய்தாலும், தம்மைவிட வேறொருவர் இன்னும் சிறப்பாக ஆட்சி செய்வார் என்று நம்புங்கள்..!
  • மக்களில் ஒரு சாரார் தம்மை- தம் ஆட்சியை எதிர்த்தால்... பேசாமல் அதையே ஒரு வழக்காக நீதி மன்றத்தில் வைத்து, ஆட்சியாளர் குற்றவாளிக்கூண்டில் ஏறி தம் தரப்பு வாதங்களை வைத்து இருவருக்கும் பொதுவான நம்பகமான நீதிபதி கொண்டு அமைதியான முறையில் தீர்வு காணுங்கள்..! அதை நேரடி ஒளிபரப்பில் நாட்டு மக்களுக்கு காண-கேட்க அளியுங்கள்..!
  • எக்காரணம் கொண்டும் எதிர்க்கும் பொதுமக்கள் மீது கொலைபாதக அடக்குமுறை செலுத்தி கொன்று குவிக்காதீர்கள்..!
  • தன்னை சுற்றி எப்போதும் பெண்களை (பாதுகாவலர்கள் எனும் பெயரில்) வைத்துக்கொண்டு ஆடம்பரமாகவும் அசிங்கமாகவும் மக்களுக்கிடையே அநீதி இழைத்துக்கொண்டு வாழ்ந்தால்... மக்கள் உங்களை அடியோடு வெறுத்து விடுவார்கள்... நீங்கள் எவ்வளவுதான் சிறந்த ஆட்சியாளர் என்றாலும் கூட..!
அடுத்து...

இன்னொரு கேடுகெட்ட மோசமான படிப்பினை ஒன்றும் உள்ளது..! 

  • எண்ணெய் வளம் கொண்ட ஆட்சியாளர்களின் மண்டை மயிர்கூட இனி அமெரிக்க - பிரிட்டிஷ் - ஐரோப்பிய ஏகாதிபத்திய நலனுக்கு எதிராக அவர்களின் விருப்பத்துக்கு எதிராக ஆடிவிடக்கூடாது..! அப்படி மீறி ஆடினால்... அந்த தலையே கொய்யப்படும்..! அல்லது... கொய்யவைக்கப்படும்..!
மக்களே..! உலகின் பயங்கரவாதங்களுக்கு எல்லாம் மூலகர்த்தாவான... ஆயுதவியாபாரம் செய்யும் அமெரிக்க -ஐரோப்பிய- சியோனிஸ நேட்டோ பயங்கரவாதிகளை நாம் எப்போது இனங்கண்டு கொள்வது..? அமெரிக்கர்களே இவ்வுண்மையை புரிந்து கொண்டு "WALL STREET ஆக்கிரமிப்பு போராட்டம்" என்று ஆரம்பித்து விட்டார்களே..!

கடாஃபியின் இறப்புக்கு பின்னர், அவரின் ஆட்சி பற்றியும் நிகழ்கால லிபியா பற்றியுமான ஒரு 'அலசல்' அல்லது அதுபற்றியான ஒரு 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்', முற்றும்..! 

"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
 
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.

என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
Hayas.