நிச்சயமாக! முஃமினான அடியானுக்குச்  சுவர்க்கத்தில் கொடையப்பட்ட ஒரே முத்தினாலுள்ள கூடாரம் தயார் செய்யப்பட்டிருக்கும்.  வானில் அதன் உயரம் அறுபது மைல்களாலும். அக்கூடாரத்தில் அவனுடைய குடும்பத்தார்கள்  வசிப்பார்கள். அவர்களை அவன் சுற்றிப் பார்த்து வருவான். (கூடாரம் விஸ்தீரணமாக  இருப்பதால்) அவர்கள் சிலர், சிலரைப் பார்க்கமாட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் முத்துக்களின் வகைகளால் உருவாக்கப்பட்ட பல அறைகள் உண்டு,  அவைகள் அனைத்தின் உள் பக்கத்திலிருந்து வெளிப்பக்கத்தையும், வெளிப்பக்கத்திலிருந்து  உள் பக்கத்தையும் பார்க்கலாம். எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும்  கேட்டிராத இன்பங்களும் அருட்கொடைகளும்; அங்கிருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள். (சுனனுல் பைஹகி)
சுவர்க்கத்தின் மரங்கள்
1. சுவர்க்கத்தில் ஒரு மரமுண்டு, நூறு வருடம் பிரயாணம் செய்யும் ஒரு பிரயாணி  அதன் நிழலை கடக்க முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,  முஸ்லிம்)
2. சுவர்க்கத்திலுள்ள எல்லா மரங்களின் அடியும் தங்கத்திலானுள்ளது என நபி(ஸல்)  அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
3. ஒரு மனிதன் சுவர்க்கத்திலுள்ள (மரத்திலிருந்து) ஒரு கனியை கொய்தால் அந்த  இடத்தில் இன்னுமொரு கனி வந்துவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுல்  பஸ்ஸார்)
4. நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் அருகில் (அதன் நிழலில்)  நல்ல வலிமையான, விரைவாகச் செல்லும் குதிரையில் சவாரி செய்யும் மனிதன் நூறு ஆண்டுகள்  சவாரி செய்து சென்றாலும், அம்மரத்தைக் கடந்து செல்ல முடியாது. (அத்தகு மாபெரும்  மரமாகும் அது) புகாரி, முஸ்லிம்
சுவர்க்க வாசிகளின் பதவிகள்
சுவர்க்கவாசிகள், சுவர்க்கத்தில் தங்களை விட மேலான அந்தஸ்தைப் பெற்று,  சுவர்க்கத்தின் மேல் அறைகளில் வசிப்போரை காண்பது, நீங்கள் அடிவானில்  கிழக்கிலிருந்தோ அல்லது மேற்கிலிருந்தோ சென்று கொண்டிருக்கும் – இலங்கும்  நட்சத்திரத்தைக் காண்பது போன்றாகும்.
இது அவர்களின் மத்தியிலுள்ள பதவி மற்றும் அந்தஸ்தின் இடைவெளியின் காரணமாகும்.  அப்பொழுது, தோழர்கள் யா ரஹுலல்லாஹ்! அவை நபிமார்களின் தங்குமிடங்களாகும்.  மற்றவர்கள் அவர்களை அடையமுடியாது எனக் கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம், (அவை நபிமார்களின் தங்குமிடங்கள் போன்றவை  தான்)எனினும் என் உயிர் எவன் கைவசமிருக்கிறதோ, அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக!  அவர்கள்(சுவர்க்கத்தின் அவ்வுயர்ந்த அறைகளில் வசிக்கும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்)  ஈமான் கொண்டு நபிமார்களை உண்மைப் படுத்திய சத்திய சீலர்கள் ஆவர் – எனப்  பகர்ந்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தின் கடை வீதி
நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு கடை வீதி உள்ளது. ஒவ்வொரு ஜும்ஆ அன்றும்  சுவர்க்கவாசிகள் அந்தக் கடைவீதிக்கு வருவார்கள். அப்பொழுது வடக்குத் திசையிலிருந்து  ஒரு காற்று வீசும். அக்காற்று அவர்களின் முகங்களிலும், ஆடைகளிலும் தவழ்ந்து  நறுமணத்தைப் பரப்பும். அதனால் அவர்களின் அழகும், பொழிவும் அதிகமாகும். அதே நிலையில்  அவர்கள் தங்களின் குடும்பத்தாரிடம் திரும்புவார்கள். அப்பொழுது அவர்கள்  குடும்பத்தார்கள்., அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக உங்களின் அழகும், பொலிவும்,  அதிகமாகி விட்டது என்பார்கள். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக!  எங்களுக்குப் பின் உங்களின் அழகும், பொலிவும் கூட அதிகமாகி விட்டது என்பார்கள்.  (முஸ்லிம்)
சுவர்க்கத்தின் நதிகளும் அது ஓடும்  வழிகளும்
மிஃராஜின் போது ஏழாவது வானத்திலுள்ள சித்ரத்துல் முன்தஹா எனக்கு உயர்த்தி  காட்டப்பட்டது. அதனுடைய பழங்கள் ஹஜர் என்ற ஊரிலுள்ள குடம் போன்றதாகும். அதனுடைய  இலைகள் யானையின் காது போன்றதாகும். அதனுடைய தண்டிலிருந்து வெளிப்படையான இரு  ஆறுகளும் மறைமுகமான இரு ஆறுகளும் ஓடுகின்றது. ஜிப்ரீலே இது என்னவென்று? நான்  கேட்டேன். மறைமுகமான இரு ஆறுகளும் சுவர்க்கத்தில் ஓடுகின்றது, வெளிப்படையான இரு  ஆறுகளும் நைலும் ஃபுறாத்துமாகும் என ஜிப்ரீல்(அலை) அவர்கள் அறிவித்தார்கள் என  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல் கவ்தர் சுவர்க்கத்திலுள்ள ஆறாகும், அதனுடைய இரு ஓரங்களும் தங்கமாகும்.  முத்து பவளத்தின் மீது அது ஓடுகின்றது. அதனுடைய மண் கஸ்தூரியை விட மிகவும் மணமானது.  அதனுடைய தண்ணீர் தேனைவிடவும் இனிமையானது, ஐஸ் கட்டியை விடவும் வெண்மையானது என  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
சுவர்க்க வாசிகளின்  விரிப்புகள்
(ஒன்றில் மேல் ஒன்றாக) உயரமாக்கப்பட்ட விரிப்புகளிலும் (அமர்ந்திருப்பார்கள்)  ’27:34′ என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு நபி(ஸல்) அவர்கள் விளக்கமளிக்கும் போது  இரண்டு விரிப்புகளுக்குமிடையில் வானத்திற்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரத்தை  போன்றதாகும் என கூறினார்கள். (அஹ்மத்)
சுவர்க்கத்திலுள்ள ஒரு விரிப்பிற்கும் மற்ற விரிப்பிற்குமிடையிலுள்ள உயரம்  வானத்திற்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரத்தை போன்றதாகும். அவ்விரண்டுக்கு  மத்தியிலுள்ள தொலைவு 500 ஆண்டுகள் பிரயாணம் செய்யும் அளவாகும் என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள். (திர்மிதி)
அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள்  பாகங்கள் ”இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில்  (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும். 55:54
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது – ஒருவரையொருவர்  முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். 56:15,16
சுவர்க்க வாசிகளின் ஆபரணங்கள்  
1. சுவர்க்கவாசிகளில் ஒரு ஆண் இவ்வுலகத்தை பார்த்து அவர் (அணிந்திருக்கும்)  காப்பு இவ்வுலகுக்கு தெரிந்து விட்டால் நட்சத்திரங்களின் ஒழியை சூரியன் மறைப்பது  போல் அவரின் (ஆபரணத்தின்) பிரகாசம் சூரியனின் ஒழியை மறைத்துவிடும் என நபி(ஸல்)  அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
2. உளு செய்யும் போது தண்ணீரை (உடலில்) செல்லுத்தும் அளவிற்கு ஒரு முஃமினுக்கு  (நாளை மறுமையில்) ஆபரணங்கள் அணுவிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (முஸ்லிம்)
3. சுவர்க்கவாசி, சுவர்க்கத்திலே ஒரு பக்கமிருந்து அடுத்த பக்கம் சாய்வதற்கு  முன் ஒரு பக்கத்திலேயே 70 வருடம் சாய்ந்திருப்பார், அப்போது ஒரு பெண் வந்து அவரின்  இரு தோள்புஜத்தையும் தட்டுவாள். அவளின் கன்னத்திலே அவரின் முகத்தை முகம் பார்க்கும்  கண்ணாடியில் பார்ப்பதை விட மிகத் தெளிவாக பார்ப்பார். அந்தப் பெண்ணின் மீதுள்ள  மிகக்குறைந்த அந்தஸ்துள்ள முத்துக்கள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலுள்ள  பகுதிகளை இலங்கவைத்து விடும். அந்தப் பெண் அவருக்கு ஸலாம் கூறுவாள், அவரும் அதற்கு  விடை கூறிவிட்டு, நீ யார்? என கேட்பார். நான்தான் உனக்கு மேலதிகமாக கொடுக்கப்படும்  (கூலி) எனக் கூறுவாள். அவள் 70 புடவைகளை அணிந்திருப்பாள். அதில் குறைந்த அளவானது  நஃமான் என்னும் சிவப்பு நிற தாவரத்தைப் போன்று மெதுமையான பழிச்சென்று  இலங்கக்கூடியதாகும். அப்புடவைகளையெல்லாம் தாண்டி அவளின் காலில் உள்ள மஞ்சையை  பார்க்கும் அளவு அவரின் பார்வை செல்லும். அப்பெண்ணின் மீது தங்கத்தினாலும் வைரக்  கற்களினாலும் செய்யப்பட்ட கிரீடம் அணியப்பட்டிருக்கும். அதிலுள்ள குறைவான அளவுள்ளது  கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியிலுள்ள பகுதியை இலங்க வைத்துவிடும் என நபி(ஸல்)  அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
சுவர்க்க வாசிகளின்  பண்புகள்
சுவர்க்கத்தில் நுழையும் முதல் கூட்டத்தினரின் தோற்றம், பெளர்னமி இரவின்  சந்திரனின் தோற்றத்தைப் போன்றதாகும். அதில் அவர்கள் உமிழமாட்டார்கள், அவர்களுக்கு  மூக்குச்சளியும் ஏற்படாது, அவர்கள் மலங்கழிக்கவும் மாட்டார்கள், அதில் அவர்களின்  பாத்திரம் தங்கமாகும். அவர்களின் சீப்புகள் வெள்ளியினாலும் தங்கத்தினாலுமாகும்,  அவர்களின் நெருப்பு கங்கிகள் (மணத்தை ஏற்படுத்தக்கூடிய வகைகளின் ஒன்றாகிய – அலுவ்வா  – என்னும் வகையைச் சேர்ந்த மரத்திலாகும்) அவர்கள் தெளிப்பது கஸ்தூரியாகும்,  அங்குள்ள ஒவ்வொருவருக்கும் இரு மனைவிகள் இருப்பார்கள். அவர்களின் அழகால்  அவ்விருவரின் கெண்டைக்காலின் மஞ்சையை அவ்விருவரின் சதையை தாண்டியும் அவர்  பார்ப்பார். அவர்களுக்கு மத்தியில் கருத்து முறன்பாடோ ஒருவருக்கொருவர் கோபம்  கொள்வதோ இருக்காது, அவர்களின் உள்ளங்கள் ஒரு மனிதனின் உள்ளம் போன்றதாகும்,  காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை துதித்த வண்ணம் இருப்பார்கள். (புகாரி)
(நல்லமல்களை செய்து அந்த சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்பினை நம்  அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக)
 குறிப்பு: 
அல்லாஹும்ம
 ஜன்னத்துல்  பிர்தௌஸ்  சுவனம் வேண்டியும்  நரக  நெருப்பிளிருந்தும்  பாதுகாப்பு  பெற  நபி (ஸல்) அவர்கள்  கற்று  தந்த  பிரார்த்தனை.
Hayas.
No comments:
Post a Comment