Friday, January 8, 2010

அப்பன்டிக்ஸ் என்ற குடல் வால்:-

அப்பெண்டிக்ஸ் என்ற குடல் வால்:

இதைப் பற்றி நம்ம எல்லாருக்கும் எந்தளவு தெரியும்?

குடலின் நுனியில் இருக்கும் வால் போன்ற அமைப்பு. இது ஒரு தேவையில்லாத உறுப்பு; திட கழிவுகள் அதில் போய்த் தங்கும். சிலருக்கு திடீரென்று பிரச்னை கொடுக்கும்; வலி வந்துவிட்டால், அறுவை சிகிச்சை செய்து அதை வெட்டியெடுப்பதுதான் ஒரே வழி என்ற வரைதான் எனக்கும் தெரியும், போன வருடம் இந்தியா போயிருந்தபோது என் மகனுக்கும் (12 வயது) இந்தப் பிரச்னை வரும்வரை!!

அப்பெண்டிக்ஸில் பிரச்னை என்றால் வயிற்றின் வலது அடிப்பாகத்தில் மட்டுமே வலிக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். என் மகனுக்கு முதலில் சாதாரண வலி போல வயிறு முழுதும் வலி. அடுத்த நாள், தொப்புளைச் சுற்றி வலி அதிகம் இருந்தது. வாந்தி தொடங்கியது. அதற்கடுத்த நாள் வலி வலது அடிவயிற்றில் மட்டும் இருந்தது.

முதலில் பரிசோதித்த மருத்துவர்கள், வாந்தியும் இருந்ததால், ஃபுட் பாய்ஸன் என்றே கருதி, மருந்துகள் கொடுத்தனர். மூன்றாம் நாள், வலது அடிவயிற்றில் வலி என்ற பிறகுதான், அப்பெண்டிக்ஸாக இருக்கலாம் எனச் சந்தேகித்து, ஸ்கேன் செய்யச் சொன்னார். ஸ்கேன் ரிப்போர்ட், எதிர்பார்த்தபடியே, “Acute appendicitis" என்று வந்தது.

பிறகு, வேறொரு மருத்துவமனையில் அனுமதித்தோம். நான் லேப்ரோஸ்கோபிக் முறையில் செய்யும்படிக் கேட்டுக் கொண்டிருந்தேன். சாதாரணமாக அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் முடிந்துவிடும்; ஆனால் (வயிற்றின்) உள்ளே உள்ள நிலைமையைப் (!!) பொறுத்து 2 மணிநேரம் வரை ஆகலாம் என்று டாக்டர் சொன்னார்.

ஆனால் ஆபரேஷன் முடிய 3 மணி நேரம் ஆனது. மருத்துவர் மீண்டும் ஒரு அதிர்ச்சிச் செய்தி சொன்னார். அதாவது அப்பெண்டிக்ஸ் எனப்படும் குடல்வாலை நீக்க முடியவில்லை என்று!! ஏன்?

அப்பெண்டிக்ஸ் எனும் குடல்வால் பிரச்னை வந்தால், அறுவை சிகிச்சை செய்து, அவ்வாலை வெட்டி எடுப்பதுதான் அதற்கான சிகிச்சை என்றே நாம் அறிந்திருக்கிறோம். அவ்வாறு உடனே செய்யாவிட்டால், அது வெடிக்கும் சாத்தியமுண்டென்றும், அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடும் என்றும் அறிந்திருக்கிறோம். அதனாலேயே இதுதான் நோய் என்று கண்டறியப்பட்ட உடனே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால், இங்கே அவ்வாறு செய்ய முடியவில்லை என்று சொல்கிறாரே, அப்படியானால்...

காரணத்தை விளக்கினார் மருத்துவர். குடல்வால் என்பதில் இன்ஃபெக்‌ஷனே வலி உண்டாவதற்குக் காரணம். பெரும்பாலும் உணவின் மூலம் வரும் பாக்டீரியாக்களே அதன் காரணமாக இருக்கும். வாலில் நோய்த்தொற்று ஏற்பட்டு, பின் உடனடி சிகிச்சை அளிக்காமல் விட்டால், வெடிக்கும் நிலைக்குச் செல்லும். இந்த இரண்டிற்கும் நடுவே ஒரு நிலை உண்டு. அதுதான் “Appendicular mass”. அதாவது, தொற்று அதிகரித்து, வாலில் சீழ்பிடித்து, அது அருகில் உள்ள Cecum என்ற பகுதியுடனும், குடலின் மற்ற சில பகுதிகளுடனும் ஒட்டிக் கொண்டு ஒரு பந்து போல காணப்படும்.

இச்சமயத்தில் இதனை வெட்டி எடுப்பது மிக ஆபத்தானது. குடலில் ஓட்டை விழும் அபாயம் இருப்பதால் அதனை நீக்காமல், சீழை முடிந்த அளவு எடுத்துவிட்டு, சலைன் வாட்டரால் அப்பகுதியைக் கழுவிவிட்டு, அப்படியே மூடிவிட்டார்கள்.

இதற்கு சலைன் மூலம் அதிக வீரியமுள்ள ஆண்டி-பயாடிக் மருந்துகள் ஏற்றுவது மட்டுமே தகுந்த சிகிச்சை. தொற்று முழுமையாகக் குணமாகும் வரை உணவு, தண்ணீர் ஏதும் கொடுக்கக்கூடாது. இவ்வாறாக ஒரு வாரம் படுக்கையிலேயே கழிந்தது. லேப்ரோஸ்கோபிக் முறையில் செய்வதற்காக மூன்று சிறிய துளைகள் வயிற்றில் இட்டிருந்தார்கள். அதில் ஒரு துளை வழியே புண்ணைக் கழுவிய சலைன் வாட்டர் மற்றும் சீழ் (இருந்தால்) வெளியேற என்று ஒரு டியூப் மாட்டியிருந்தார்கள். புண் ஆறி வருவதை அறிய அதையும் கண்காணித்து வந்தார்கள்.

சரி, இப்படி Appendicular mass ஆகிவிட்டது என்று அறுவை சிகிச்சைக்கு முன்பே அறிந்துகொள்ள முடியாதா? தெரிந்திருந்தால் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்த்திருக்கலாமே? இனி மேற்கொள்ளவேண்டிய சிகிச்சைகள் என்னென்ன? இன்னும் பல சந்தேகங்கள் வந்தன. அந்த மருத்துவரிடமும், பின்னர் நான் சந்தித்த சில மருத்துவர்களிடமும் கேட்டும், இணையத்திலும் கண்டு அறிந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அறிகுறிகள்:

1. தொப்புளைச் சுற்றி வலி இருக்கலாம்.

2. முதலில் வயிற்று வலி, பின்னரே வாந்தி. (இது முக்கிய அறிகுறி. வயிற்றுக்கோளாறு, ஃபுட் பாய்ஸன் போன்றவற்றில் வாந்தி முதலிலும், வலி பின்னரும் வரும்).

3. வயிற்றின் வலது அடிப்பாகம் வலி.

பரிசோதனைகள்:

வலி வந்தவுடன் மருத்துவர் கைகொண்டு வயிற்றைப் பரிசோதித்தல் நலம். அல்ட்ரா-சவுண்ட் ஸ்கேனிலும் குடல்வால் நோயுற்றிருப்பதை ஒரு உத்தேசமாகத்தான் காணமுடியுமாம். ஒரு தேர்ந்த, அனுபவம் வாய்ந்த ரேடியாலஜிஸ்டால்தான் அது என்ன நிலையிலிருக்கிறது என்று சரியாகக் கணித்துச் சொல்ல முடியும்.

அந்தப் படங்களைக் காணும் மருத்துவருக்கும் அதேதான். சி.டி.ஸ்கேன் எடுத்தாலும் தெளிவாகத் தெரியாது. அனுபவமே கைகொடுக்கும்.

சிகிச்சைகள்: (for appendicular mass)

1. மேலே சொன்னதுபோல உணவு இல்லாமல், டிரிப் மூலம் மருந்துகள் மட்டுமே. தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து, குறைந்தது ஒரு வாரம் ஆகும். ஒரு மாதமும் ஆகலாம்..

2. பின்னர், சிறிது காலம் (3 மாதங்கள்) கழித்து, நமக்கு வசதிப்படும் சமயத்தில், அறுவைசிகிச்சை செய்து வாலை வெட்டி எடுப்பது.

இதுகுறித்து மருத்துவர்கள் கருத்து வேறுபடுகிறார்கள். இந்தியாவில் நான் பார்த்த மருத்துவர்கள், ரிஸ்க் வேண்டாம், மீண்டும் ஆபரேஷன் செய்துவிடுவதே நலம் என்றார்கள். பின்னர் இங்கு அபுதாபி வந்து சந்தித்த மருத்துவர்களோ (இந்தியர்கள்தான்) பிரச்னை வரும்வரை அதைத் தொடாமல் இருப்பதே நல்லது; நல்லா இருப்பவனுக்கு நாங்கள் ஆபரேஷன் செய்வதில்லை என்று சொல்கிறார்கள்.

எனக்கும் இதுவே திருப்தி தருவதால், அறுவை சிகிச்சை வேண்டாம் என்றே முடிவு செய்துள்ளோம். இணைய புள்ளிவிவரங்களும், மீண்டும் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றே சொல்கின்றன.

நாகர்கோவிலில் எங்களின் அண்டை வீட்டில் ஒரு பெண்ணும் அவர் மகளுக்கு 5 வயதிருக்கும்போது இதே போல Appendicular mass ஆனதாகவும், டிரிப் மூலம் மருந்து எடுத்துக் கொண்டதில் சரியாகிவிட்டது, த்ற்போது மகளுக்கு 20 வயதாவதாகவும், ஒரு பிரச்னையும் இல்லை என்றும் சொன்னார்.

ஒரு சாதாரண அப்பெண்டிக்ஸ் சிகிச்சைதானே என்று நினைத்த எங்களுக்குப் பல அதிர்ச்சிகளையும், அனுபவ அறிவுகளையும் தந்த நிகழ்ச்சி இது!!

No comments: